Saturday, January 14, 2012

புயல் பாதித்த மக்களுக்கு மேலும் உதவிகள் - விஜய் அறிவிப்பு

புதுவை: புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் உதவிகள் செய்யப் போவதாக நடிகர் விஜய் தெரிவித்தார்.

நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் புதுவை மக்களுக்கு இன்று நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. புதுவை சுப்பையா சாலையில் உள்ள குபேர் திருமண மண்டபத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலந்து கொள்வதற்காக நடிகர் விஜய் பகல் 11.45 மணியளவில் புதுவைக்கு வந்தார். அப்போது பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர். விஜய்யை பார்த்ததும் அவர்கள் ஆரவாரமாக கோஷமிட்டனர். அவர்களை பார்த்து கையசைத்து மகிழ்ச்சி தெரிவித்த விஜய் விழா மேடைக்கு வந்தார்.

பின்னர் நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கியது. அகில இந்திய விஜய் ரசிகர் மன்ற தலைவரும், புதுவை முன்னாள் எம்.எல்.ஏ.வுமான புஸ்சிஆனந்த் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச அரிசி, ஆடைகள், போர்வை, பாய், பாத்திரங்கள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார் நடிகர் விஜய். அப்போது அவர் பேசுகையில், "இந்த நிகழ்ச்சியை முன்கூட்டியே நடத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்குவதாக இருந்தது. ஆனால் சூட்டிங் காரணமாக என்னால் முன்கூட்டி வரமுடியவில்லை.

நாங்கள் இப்போது அளித்துள்ள உதவி சிறிய அளவிலானது தான். இன்னும் இதுபோன்ற உதவிகளை செய்வோம். அனைவருக்கும் என் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார்.

முன்னதாக விஜய் புதுவையில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை சுற்றிப்பார்த்து அங்குள்ள மக்களுக்கு ஆறுதல் கூறினார்.

விரைவில் கடலூர் மக்களையும் சந்தித்து உதவி வழங்குவதாக அவர் தெரிவி்த்தார்.


0 comments:

Post a Comment