Tuesday, December 20, 2011

ஆட்டம், பாட்டத்துடன் நித்தியானந்தாவின் பிறந்த நாள் கொண்டாட்டம்!


திருவண்ணாமலை: சாமியார் நித்தியானந்தாவின் 35வது பிறந்த நாளை அவரது முன்னிலையில் அவரது சிஷ்ய கோடிகள், இன்று திருவண்ணாமலையில் தடபுடலாகக் கொண்டாடினர்.

சினிமாப் பாடல்களுக்கேற்றபடி ஆட்டமும், பாட்டமுமாக கொண்டாடினர். பல பக்தர்களும் உற்சாகத்துடன் டான்ஸ் ஆட அதை ரசித்தார் நித்தியானந்தா.

நித்தியானந்தாவுக்கு இன்று 35வது பிறந்த நாள்.இதையொட்டி திருவண்ணாமலையில் தடபுடலான கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

நித்தியானந்தா தியானபீடம் சார்பில் திருவண்ணாமலைக்கு அவரது பக்தர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர். காலை 10 மணிக்கு அண்ணாமலையார் கோவில் முன்பு கூடிய அவர்கள் காவடி எடுத்தும், பால் குடம் ஏந்தியும் ஊர்வலமாக புறப்பட்டனர்.

இதற்காக நூற்றுக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. இந்த ஊர்வலத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மக்களுக்கும் சிரமம் ஏற்பட்டது.

இந்த ஊற்வலத்தின்போது நித்தியானந்தாவின் புகழ் பாடும் பாடல்கள் ஒலிக்கப்பட்டன. அவை அனைத்துமே சினிமாப் பாடல்களை ரீமிக்ஸ் செய்து உருவாக்கப்பட்டவை. அந்தப் பாடல்களைக் கேட்ட பல பக்தர்களும் சீடர்களும் உற்சாக மிகுதியில் இறங்கி படு வேகமாக டான்ஸ் ஆடினர். இதைப் பார்த்து பரவசத்துடன் ரசித்தார் நித்தியானந்தா.

இப்படியாக இன்று திருவண்ணாமலையில் நித்தியானந்தாவின் பிறந்த நாளை அவரது பக்தர்களும், சீடர்களும் சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.


0 comments:

Post a Comment